இலங்கை கிரிக்கெட் மீது ICC தடை

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC) உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் மீது தடை விதித்துள்ளது. இந்த தடை நவம்பர் மாதம் 10ஆம் திகதி விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும், இது சர்வதேச கிரிக்கெட்டின் விதிமுறைகளுக்கு எதிரான ஒரு செயற்பாடு என்றும் கூறியே ICC இலங்கை மீது இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு ஒன்றை நியமித்தார்.

எனினும், குறித்த செயலுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தரப்பு தொடர்ந்த வழக்கினை அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்திலும் இலங்கை கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் சபை தொடர்பிலான வாதங்கள் நீடித்து வந்தன. இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் மீது தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *