சஹரான், சச்சினின் அசத்தல் இணைப்பாட்டத்தால் இறுதிக்குள் நுழைந்த இந்தியா

இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் அணித்தலைவர் உதய் சஹரான் மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சச்சின் தாஸ் ஆகியோரின் 171 ஓட்ட இணைப்பாட்டம்  கைகொடுக்க 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இந்திய இளையோர் அணி தொடரின் இறுதிப் போட்டிக்குள் கால் பதித்தது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வரும் இளையோர் உலகக் கிண்ணதின் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளின் முடிவில் சுப்பர் சிக்ஸ் சுற்றின் குழு ஒன்றில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய இளையோர் அணி மற்றும் குழு 2இல் 2ஆம் நிலையிலிருந்த தென்னாபிரிக்க இளையோர் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று (6) பலப்பரீட்சை நடாத்தின.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய இளையோர் அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க இளையோர் அணிக்கு ஆரம்ப வீரரான பிரடோரியஸ் மற்றும் செலட்ஸ்வானே ஆகியோர் அரைச்சதம் கடந்து முறையே 76 மற்றும் 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, அவ்வணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் லிம்பானி 3 விக்கெட்டுக்களையும், முஸீர்கான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் சவால் மிக்க 245 ஓட்ட இலக்கினை விரட்டிய இந்தியா இளையோர் அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுத்தனர் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்கள். ஒரு கட்டத்தில் 32 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டம் கண்டது இந்தியா. 

இருப்பினும் 5 ஆவது விக்கெட்டில் இணைந்த அணித்தலைவரான உதய் சஹரான் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் தத்தமது அரைச்சதங்களை கடந்ததுடன் தமக்கிடையில் 171 ஓட்ட வெற்றி இணைப்பாட்டத்தை பகிர்ந்து அசத்தினர். இதனால், இந்திய இளையோர் அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது. 

உதய் சஹரான்  மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் முறையே தலா 81 மற்றும் 96 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மகாகா மற்றும் லூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *