AFC ஆசிய கிண்ண தொடருக்கான தகுதிகாண் (Play off) சுற்றில் கம்போடியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான இலங்கை தேசிய உதைபந்தாட்ட குழாத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் (FFSL) வெளியிட்டுள்ளது.
இந்த தகுதிகாண் தொடரில் கம்போடியா அணிக்கு எதிரான முதல் கட்ட போட்டி (1 st leg) செப்டம்பர் 5ஆம் திகதி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் கட்டப் போட்டி செப்டம்பர் 10ஆம் திததி கம்போடியாவில் இடம்பெறவுள்ளது.
இதற்காக கடந்த சில வாரங்களாக இந்த தொடருக்காக இலங்கை வீரர்கள் கொழும்பில் வதிவிட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வெளிநாடுகளில் தொழில்முறை கால்பந்து ஆடும் வீரர்களும் இலங்கை குழாத்துடன் வந்து இணைந்து பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இளம் வீரர் டிலொன் டி சில்வா உபாதையின் காரணமாக உள்வாங்கப்படவில்லை. அதேபோன்று, இலங்கை அணி இறுதியாக புருனே அணியுடன் விளையாடிய நட்பு ரீதியிலான போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத இலங்கை அணியின் முக்கிய வீரர்களான ஜேசன் தயாபரன், ஜாக் ஹிங்கர்ட் மற்றும் கிளோடியோ ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, இங்கிலாந்தில் தொழில்முறை கால்பந்து விளையாடும் முன்கள வீரரான சம் டர்ரண்ட் இலங்கை அணிக்காக முதல் முறையாக உள்வாங்கப்பட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை இளையோர் அணிக்காக (20 வயதின்கீழ்) விளையாடிய தெனுக ரனவீரவும் தேசிய அணியில் முதல் முறையாக உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை வீரர்கள் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு கம்போடிய அணியுடன் சர்வதேச போட்டியொன்றில் மோதியிருந்ததுடன், அதில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை தோல்வியடைந்தமை நினைவுகூறத்தக்கது.
இலங்கை குழாம்