இரண்டு நட்பு ரீதியிலான போட்டிகளுக்காக புருனே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை தேசிய கால்பந்து அணிக் குழாம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், காயம் காரணமாக இலங்கை அணியின் முக்கிய வீரர்களான ஜேசன் தயாபரன், ஜாக் ஹிங்கர்ட் மற்றும் கிளாடியோ ஆகியோர் புருனே அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கெடுக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெற்றியுடன் பிபா தொடரை நிறைவு செய்த இலங்கை
- இளையோருக்கான ”Y19” புதிய கால்பந்து தொடர்
- Lanka Football Cup கிண்ணம் கண்டி கால்பந்து கழகம் வசம்
இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற பிபா தொடரில் அணியில் உள்வாங்கப்படாத மொஹமட் ஹஸ்மீர், மொஹமட் அமான் ஆகியோருடன் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த முன்கள வீரர் றிப்கான் மொஹமட் இந்த போட்டிகளுக்கான இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை லீக்குகளில் ஒன்றான நெசனல் பிறீமியர் லீக் விக்டோரியா மாநிலத்தில் போட்டியிடும் டன்டினொங் தண்டர் அணிக்காக ஆடி வரும் முன்கள வீரரான வேட் டெக்கர் இலங்கை குழாமில் முதன் முறையாக இணைந்துள்ளார்.
இவர்களுடன் ஏனைய வீரர்களாக, இறுதியாக இலங்கை அணி விளையாடிய தொடரில் உள்வாங்கப்பட்டிருந்த வீரர்கள் இந்த போட்டிகளுக்கும் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடருக்கும் இலங்கை அணியின் தலைவராக கோல் காப்பாளரும் சிரேஷ்ட வீரருமான சுஜான் பெரேரா செயற்படவுள்ளார். மேலதிக கோல் காப்பாளர்களாக கவீஷ் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் முர்ஷித் ஆகியோர் உள்ளனர்.
புருனே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி எதிர்வரும் 8ஆம் திகதியும் இரண்டாவது போட்டி எதிர்வரும் 11ஆம் திகதியும் இலங்கை நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கை குழாம்
இலங்கை குழாம்